சவுதி பெண்ணுக்கு கனடா புகலிடம்

சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தாய்லாந்திற்கு சென்ற நிலையில் பாங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவுதி பெண்ணுக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளுக்கமைய தாம் அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான தீர்மானங்களை எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கனடாவுக்கு செல்லும் வழியில்  விமானத்தின் உள்ளே இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்ட ஔிப்படங்களை குறித்த  பெண் தனது டுவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சவுதி பெண் பாங்கொக் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால் குவைத்திற்கு திரும்ப வேண்டுமென ஆரம்பத்தில் அவரிடம் கூறப்பட்டது.

அதற்கு மறுப்பு தொிவித்த அவர், விமான நிலையத்தின் விருந்தக அறையை விட்டு வெளியே வராமல் தன்னைதானே சிறைப்படுத்திக் கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதுமாத்திரமன்றி இஸ்லாம் மதத்தை தான் துறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு இஸ்லாத்தை துறப்பது சவுதி அரேபியாவில் மரண தண்டனை பெறும் குற்றமாகும்.

இந்தநிலையில், அவர் அகதியாக ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை தெரிவித்தது.

அகதிகள் தகுதி நிலை வழக்கமாக அரசாங்கங்களால் வழங்கப்படுகின்றன. ஆனால், நாடுகளால் இதனை வழங்க முடியாத பட்சத்தில் அல்லது அகதி அந்தஸ்து கொடுக்க விரும்பாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையே அதனை வழங்கலாம் என்று ஐ.நா.வின் இணையதளம் தெரிவிக்கிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment