பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல் தலைமைகள்!


பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள் இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தையே பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் வடக்கிற்கு விஐயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யுத்தக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியுள்ளார்.

அதாவது யுத்தத்தில் நடந்தவற்றை கைவிட்டு அபிவிருத்தியை நோக்கி பயணிப்போமென்ற சாரப்பட அவருடைய கருத்து அமைந்திருந்தது.

சிங்கள கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் அப்படித்தான் செய்வார் என்பது எதிர்பார்க்கத்தக்கது  ஆனால் அந்த சிங்கள அரசிற்கு முண்டு கொடுத்து வருகின்றவர்கள் பிரதமர் அவ்வாறு பேசுகின்ற வாய்மூடி மௌனமாக இருந்தார்கள்.

ஆனால் அதன் பிறகு மேடை நாகரீகம் கருதி அதனைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக  தாம் அங்கு எதுவும் பேசவில்லை என ஊடகங்களுக்கு கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றல்ல.

தமிழ் மக்களுடைய விடயங்களை பிரச்சனைகளை ஐ.நா மனித உரிமைக்கு கொண்டு சென்று தீர்வைக் காணுவோம் என்று சொல்லி பதவிக்கு வந்தவர்கள் இன்றைக்கு அதனை விட்டுவிட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இல்லாவிட்டால் பதவியில் அவர்கள் இருக்க முடியாது. அவ்வாறான சூழலிலில் கூட பிரதமர் இங்கு வந்து இதனை கதைக்கும் போது இதனை மறுக்க முடியாதவர்களாவே இருந்தனர்.

அவ்வாறு அரச தரப்பினர்கள் முன்னாள் மௌனமாக இருந்துவிட்டு அதன் பின் தமிழ் ஊடகங்களுக்கு வேறு காரணங்களைக் கூறுவது தான் இவர்களது வரலாறாக உள்ளது. இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

ஜெனிவா கூட்ட தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் எங்களது தமிழ்த் தலைமைகள் சரியான வழியில் இதனைக்கையாள வேண்டியது அவசியமானது. இந்த அரசை காப்பாற்றுகிறோம் ஆகவே எமது பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அரசிற்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்துவோம் என்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

அதனூடாகவே எமது பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி செல்ல முடியும். ஆனால் அந்த அழுத்தம் அல்லது ஒருமித்த முடிவு இல்லாவிட்டால் ஏமாற்று ஐக்கிய நாடுகள் பிரேரணையாகத் தான் மீண்டும் அமைய கூடிய நிலைமையே உள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக சட்டமூலம் கொண்டு வரப்பட்டு ஒரு வருடகாலமாகியும் அந்த சட்டமூலம் இயங்கவில்லை. அந்த சட்ட மூலத்திற்கு அமைய ஒரு அலுவலகம் திறக்கப்பட்டபை என்பதும் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. அதற்கு மேலதிகமாக அதில் ஏதும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் விசாரணை நீதி நியாயங்களை இத்தனை வருடமாக எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த அரசும் சரி இந்த அரசும் சரி ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை ஏமாற்றுகிற நிலைமையே உள்ளது.

ஆகவே எமக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் இவ்வாறு எமக்கான எதனையும் வழங்க தயாரில்லாத அரசாங்கம் எமக்கும் தேவையா அத்தகைய அரசிற்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டுமா என்று பார்க்க வேண்டும்.

எனவே தமிழ் மக்களுக்கு பலதைச் சொல்லி வாக்கைப் பெற்றவர்கள் இன்றைக்கு அதற்காகவே செயற்படுகிறார்களா என்றும் பார்க்க வேண்டும். ஆகவே மக்களுக்காக மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.















Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment