மதம் என்ற சிறைக்குள் யாரும் சிக்குண்டு விடாதீர்கள். மனிதத்துவம் ஐக்கியப்பட நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதே அவசியமாகும். ஒரு சிலரின் அர்ப்பத்தனமான செயல்பாட்டுக்காக ஒரு சமூகத்தை முழுமையாக குற்றம் சாட்டுவது முறையல்ல.
இவ்வாறு மன்னார்மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்தள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரவு சார் கலாசார பாரம்பரிய விழுமியத்துடன் பின்பற்றுவதே சமய நெறி முறை ஆகும். அவரவர் தத்தமது மதத்தைப் பின் பற்றுவதும் விசுவசிப்பதும் சுய விருப்பிலானது.
அது மற்றவர்களுக்கு பாதகமில்லாமல் அமையவேண்டும்.
மன்னாரில் மனிதத்தை விட மதத்திற்கு முக்கியத்துவமளிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
தமிழர்கள் தேசியத்தைக் கடந்து சமயத்துக்குள் பிளவுபடுவது பொது எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இதனை சமயத்தலைவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
திருக்கேதீஸ்வரச் சம்பவம் ஏற்புடையதன்று. வன்முறை நீதியை நிலைநாட்டவல்லதல்ல மேலும் சமூக பிறழ்வை கூட்டு வன்முறைக்கு தூபமிடும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முரன்பாடுகளை சமப்படுத்துவதற்கு ஆரோக்கியமான கலந்துரையாடல் மேற்கொள்வது சிறந்தது.
சமூக ஊடகங்கள் பெரு வளர்ச்சி பெற்று விட்ட நிலையில் பொது வெளியில் சட்டத்தை தம்வசப்படுத்தி அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவது அறிவுபூர்வமான முன்னகர்வாக அமைந்துவிடாது.
சம்மந்தப்பட்டவர்கள் பொது வெளி நாகரீகத்தை கருதி பக்குவமாக வார்த்தைகளை பேசி உரிய அனுகு முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
எதிர்காலத்தில் வன்முறையற்ற புரிந்துணர்வை ஏற்படுத்த முரண்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். என்றார்.
0 comments:
Post a Comment