சீனாவில் விற்கப்படும் பாக்கிஸ்தான் பெண்கள்

பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஏழை இளம் பெண்கள், சீன இளைஞர்களுக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். சீனாவில் கணவர்களின் கொடுமை தாங்காமல் அவர்கள், மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.

பாக்.,கில் வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து தரகர்கள் செயல்படுகின்றனர். அவர்களின் பெற்றோர்களிடம் அணுகும் தரகர்கள், பெண்களை சீன இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.


சீன கிறிஸ்தவர்கள்

சீனர்கள் மதம் மாறிய பணக்கார கிறிஸ்தவர்கள் எனவும் சொல்கின்றனர். இதற்கு பாதிரியார்கள் சிலரும் உதவி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ஏமாற்றப்படும் பாக்., பெண்கள், சீனாவில் கிராமப் பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு துன்புறுத்தப்படும் பெண்கள், தங்களது பெறறோர்களை சந்திக்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். மொழி புரியாமல், தங்களது பிரச்னைகளை அவர்களால் கூற முடிவதில்லை.

லாகூரிலிருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா நகரை குறிவைத்து தரகர்கள் செயல்படுகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் என 100 பேருக்கு சீன இளைஞர்களுடன் திருமணம் நடந்துள்ளது. இங்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் வசித்தாலும், மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள பாதிரியார்கள் சிலர், தரகர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள், இளைஞர்கள் மதம் மாறியது கடவுளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏழை பெண்களுக்கு உதவுவதாகவும் கூறுகின்றனர். கிறிஸ்தவர்களாக மாறிவிட்டதாக சீனர்கள் கூறினாலும், இதற்கான ஆவணங்களை அவர்கள் தருவதுமில்லை. திருமணம் செய்து வைக்கும் பாதிரியார்களும் கேட்பதுமில்லை. பெற்றோர், பாதிரியார்கள், தரகர்கள் ஆகியோருக்கு சேர்த்து, 3,500 முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை சீன இளைஞர்கள் பணம் கொடுக்கின்றனர்.

இதனை ஆட்கள் கடத்தல் எனக்கூறும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண, மனித உரிமை மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் அஸ்லம் அகஸ்டின், இந்த விவகாரத்தை சீனா கண்டுகொள்வதில்லை. எந்த கேள்வியும், ஆவணமும் இல்லாமல் சீனா விசா வழங்கி விடுகிறது என்றார். சீனாவில், பாகிஸ்தானிய பெண்கள் மற்றும் சிறுமிகள் செக்ஸ் அடிமைகளாக மாறும் அபாயம் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
பாதிக்கப்பட்ட சில பெண்கள் கூறுகையில், சீனாவில் ஒரு படுக்கை அறை மற்றும் சிறிய அறை கொண்ட வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். எப்போதாவது தான் வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். வலுக்கட்டாயமாக எங்களுக்கு மருத்துவ சோதனை செய்தனர். ஆரம்பத்தில் காரணம் தெரியாவிட்டாலும், பின்னர் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என தெரிந்து கொள்ள இந்த சோதனை நடத்தியது தெரியவந்தது. கிறிஸ்துமஸ் நாளன்று, தேவாலயத்திற்கு அழைத்துச் செல்ல கேட்டபோது, கடுமையாக தாக்கியதுடன் மொபைல் போனை உடைத்துவிட்டனர். போலீசிற்கு செல்வோம் என கூறிய பிறகே, பெற்றோர் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். எங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும், பெற்றோர் கட்டாயப்படுத்தினர் என்றார்.


காரணம் என்ன

சீன பெண்கள் கர்ப்பத்திலேயே கரு ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து, பெண் என்றால் கலைத்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பாக்., பெண்களை அவர்கள் குறி வைக்கின்றனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment