அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் அதன் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதன்போது கடந்த மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரின் உரையுடன் கூட்டம் ஆரம்பமானது. அப்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட், அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
குறித்த நியமனம் ஐக்கிய தேசிய கட்சியின் சிபாரிசுக்கு அமைவாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும். சுற்று நிரூபத்திற்கு மாறாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் எதிர்ப்பினை வெளியிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, ஜனாதிபதி கடந்த காலத்தில் அரசியலமைப்புக்கு மாறாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதாகவும் அவரினாலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் தமக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தாங்கள் இந்த கூட்டத்தினை நடாத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இதற்கான பதிலை அரசாங்கத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கலந்துரையாட முடியாது என்றும் அலிசாஹீர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இங்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிநேசன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி, இதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
எனினும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு மாறாக நடைபெறும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தம்மால் கலந்துகொள்ள முடியாதென தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment