மட்டக்களப்பில் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று  காலைமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மண்முனைப்பற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பகுதியான புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு செல்லும் வீதி மோசமாக சேதமடைந்துள்ளது. இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பிரச்சினை குறித்து மண்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் மற்றும் தவிசாளரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டுசென்ற போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் அவர்களால் முன்னெடுக்கப்படவில்லையென ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியால் குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது வாகனங்கள் அடிக்கடி குடைசாய்வதன் காரணமாக தாங்கள் தினமும் உயிரை பணயம் வைத்து சேவையாற்றவேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தமது பழுதடையும் வாகனங்களை திருத்துவதிலும் வாகனங்களுக்கு தேவையானவற்றை செய்துதருவதிலும் பிரதேசசபை இழுத்தடிப்பு செய்துவருவதாகவும் சுகாதார ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமது கோரிக்கைகளை பிரதேசசபையின் உரிய அதிகாரிகள் விரைவாக தீர்த்துவைக்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment