உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று மதியம் அரங்கேறுகிறது.
கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை சாய்த்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் சார்ந்து இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடினால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.
இந்த ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளம் காணப்படுகிறது. ஆனால் மோசமான வானிலை உருவானால், தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சு எடுபடலாம். அது மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக் கூடியவர்கள். அதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் 3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் அவர்களை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் பிரதான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லாதது சற்று பலவீனமாகும். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொன்னது போல் இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது முக்கியமாகும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment