புத்தளத்தில் மன்னார் பாடசாலைகள் ; ஆளுநருக்கு செல்வம் எம்.பி. கடிதம்

மன்னார் மாவட்டத்திற்குரிய பல பாடசாலைகள் தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மன்னர் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் இன்றும் புத்தளம் மாவட்டத்திலே இயங்கி வருகின்றன. அந்த ஆசிரியர்களுக்குரிய சம்பளமும் அங்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததனால் அம் மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. 

நாட்டில் சுமூகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அப் பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.  

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் கல்வியைக் கற்று  உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 

இந்த நிலையில் புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு மன்னார் மாவட்ட உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில் அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளியிலேயே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

மன்னாரிலிருந்து மன்னாரிலேயே கல்வி கற்கும் மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றது. இதனால் கடுமையான பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றனர். புத்தளத்தில் இயங்கும் பாடசாலைகள் புத்தளம் மாவட்டதினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். 

இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது. 

முன்னாள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். 
எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில்  உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்களின் வளங்கள் புத்தளம் மாவட்டத்தினால் பயன்படுத்தப்படுகின்றமையும் மன்னார் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆகவே இதை நீங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப் பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்- என்றுள்ளது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment