மாணவர்கள் மீதான ஒரு குற்றச்சாட்டு விலக்கப்படுகிறது: இன்று பிணை கிடைக்கலாம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் ஒன்றை மீளப்பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணைவழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதனை மாணவர்கள் சார்பில் மேல்நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளும் உறுதி செய்தனர்.
மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத்தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உபவிதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல்உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் மாணவர்கள் இருவருக்கும் எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படும் போது கோப்பாய் பொலிஸார் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உள்ளனர் என அறிய முடிகிறது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை அடுத்தே இந்த முடிவுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் வந்துள்ளது என சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார். எனினும் அத்தனை குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதி மாணவர்கள் இருவரையும் விடுவிப்பதே தமது முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மாணவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் அணைத்து இந்த வழக்கு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சமர்ப்பணம் செய்தனர்.
மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment