உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரல்

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன்படி நினைவுகூரல் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நினைவுகூரல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டன. குருக்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அத்தோடு முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவுகூரலின் இனவழிப்பு வாரத்தின் அஞ்சலி நிகழ்வுகள் மே 12ஆம் திகதியிலிருந்து இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் இந்த நிகழ்வுகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கோர சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில்  பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தமாட்டார்களென இராணுவத் தளபதி அறிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment