கூட்டமைப்பு வெட்கித் தலைகுனிய வேண்டும் - கடுமையாகச் சாடும் சங்கரி

விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் கள்ள வாக்குகள் மூலம் நாடாளுமன்றம் சென்று பதவி சுகங்களை அனுபவித்து அதன் தொடர்ச்சியாக இன்று வரை நாடாளுமன்ற சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் தலைமைகளின் துணிச்சலைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். 

இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார், அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கும் அரசை இடித்துரைக்கும் நோக்கத்தில், ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்த முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடு, சரி தவறுகளுக்கு அப்பால், பாராட்டத்தக்கதாகும். 

சிறுபான்மை இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில மததீவிரவாதக் கும்பலுக்கு இது ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் கள்ள வாக்குகள் மூலம் நாடாளுமன்றம் சென்று பதவி சுகங்களை அனுபவித்து அதன் தொடர்ச்சியாக இன்று வரை நாடாளுமன்ற சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் தலைமைகளின் துணிச்சலைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். 

வாக்களித்த மக்களும், கள்ள வாக்குகளுக்கு அபார ஒத்துழைப்பு கொடுத்த விடுதலைப் புலிகளும் கொத்துக் கொத்தாக குண்டுவீச்சில் செத்துக் கொண்டிருந்தபோது பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டு வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்தார்கள்.

இறுதிக்கட்டப் போரில் அவர்களின் தொலைபேசி இணைப்புகளையும் செயலிழக்க வைத்துவிட்டு, யுத்தம் முடிந்த பின், யுத்தத்தை முடித்து வைத்தற்கு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு  சம்பந்தன் பாராட்டும் தெரிவித்தார். 

ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஜனநாயகத்திற்கு விரோதமாக மேலும் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்றத்தை நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேரும் அரசில் ஜனநாயக விரோத செயற்பாட்டைக் கண்டித்து நான் உட்பட, பதவிகளைத் துறந்தோம். 

அதில் சம்பந்தனும் அடங்குவார்.  அந்த சம்பந்தனா இன்று இப்படி பதவி மோகத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று எண்ணும்போது வேதனையாகவிருக்கின்றது.

கள்ள வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற சுகத்தை அனுபவித்துவிட்டு யுத்தம் முடிந்த பின்னர் பாராட்டு தெரிவித்த சம்பந்தரின் செயற்பாட்டோடு இன்றைய முஸ்லிம் தலைமைகளின் செயற்பாட்டை ஒப்பிட்டுப் பார்த்தால்,  ஏணிவைத்தால் கூட எட்டிப்பிடிக்க முடியாது.

நாட்டின் நிலைமை மிக மோசமடைந்து விட்டது. ஜனாதிபதியும், பிரதமரும் முட்டிமோதிக் கொண்டு, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வழமைக்கு மாறாக அளவிற்கு அதிகமாக சலுகைகளையும், தேவைக்கு அதிகமான பணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கொடுத்ததன் விளைவே இன்று நாடு இந்த நிலைமைக்கு போய்விட்டது. 

இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மேடைகளில் பேசும்போது இனவாதம், மதவாதம் பேசும் அரசியல் தலைமைகள் தங்கள் மதம் சார்ந்த, இனம் சார்ந்த மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்ட தன் விளைவையே மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள்.

புத்த குருமார்கள் தாங்கள், தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள். இஸ்லாமிய தலைமைகளும் தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு, தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்னசெய்யப் போகின்றார்கள்?

இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தந்தை செல்வா, அமரர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம் போன்றவர்கள் வலியுறுத்தினார்கள்.

அன்றுதொட்டு இன்றுவரை நானும், இந்தநாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். 

அதற்கு எனக்கு கிடைத்த பரிசு துரோகி பட்டம். இனியாவது நான் சொன்னதை அல்லது சொல்வதை கேட்பார்களா? -என்றுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment