தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கத்தயார் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கத்தயார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் முன்னிலையாகி சாட்சியம் வழங்கத்தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவு குழு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பினும் அதன் பிரதான நோக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்களை தெளிவூட்டுவதே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எதிர்கட்சி, தெரிவுக்குழு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் கட்சி தவைர்களின் கூட்டத்தின் போது அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அவர் நாளை(புதன்கிழமை) விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது அவருக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஏழு தடவைகள் கூடியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதி உள்ளிட்டவர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார்.
எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment