டிக்-டாக் வீடியோவால் வந்த வினை

டிக்-டாக் வீடியோவால்  மாணவியை காதலில் விழ வைத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

டிக்-டாக் வீடியோ சமூகத்தில் பல்வேறு சீரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தச் சம்பவம்   சென்னையில் நடந்துள்ளது.

ஆண்களைவிட டிக்-டாக் வீடியோ மோகத்தில் இன்று பெண்களே மூழ்கி கிடக்கிறார்கள்.  ஆபாசமான பாடல்களுக்கு பெண்கள் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோக்களும் பரவி வருகின்றன. 

ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆபாசமாக வசனம் பேசி வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோக்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.


குறிப்பாக பாடசாலை மாணவிகள் மத்தியில் டிக்-டாக் வீடியோ போதையாகவே மாறிவிட்டது. இவர்களே டிக்-டாக் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகின்றனர்.  இவைகளால் இளம் தலைமுறையினரிடையே மோசமான கலாச்சாரம் பரவி வருவதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். 

மதுரை உச்ச நீதிமன்றும்  டிக்-டாக் வீடியோவுக்கு தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் டிக்-டாக் வீடியோ மூலம் மாணவி ஒருவர் காதலில் விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் சிவசுப்ரமணியம் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்த 13 வயது மாணவி 9 ஆம் வகுப்பு முடித்துள்ளார். தந்தையை இழந்த இவர் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி மாலையில் கடைக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறிச்சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்காத நிலையில் மாணவி நேற்று மாலை வாலிபர் ஒருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதுபற்றி ஆயிரம் விளக்கு பொலிஸில் மாணவியின் தாய்  முறைப்பாடு செய்ததையடுத்து,  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  

அப்போது அரக்கோணத்தை சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபர்தான் மாணவியை ஏமாற்றி காதலில் விழவைத்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது. 

வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்துதான் அசாருதீன் மாணவியை முதன் முதலில் பார்த்துள்ளார். பின்னர் டிக்-டாக் செயலி வீடியோ மூலம் மாணவி காதலில் விழுந்துள்ளார். இதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் மாயமான மாணவியை அசாருதீன், அரக்கோணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 10 நாள்கள் கழித்து இருவரும் சென்னை வந்துள்ளனர். 

மாணவிக்கு 13 வயதே ஆவதால், அசாருதீன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.  அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment