இலங்கை அணியுடனான வெற்றி கசப்பான இனிமை: டு பிளெஸிஸ்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியுடன் வெற்றி பெற்றது கசப்பானதாகவும், இனிமையானதாகவும் போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை அணியும், தென்னாபிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
செஸ்டர் லீ ஸ்ரீட்- ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் கருத்து தெரிவித்த அவர்,
“இது நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உடைமாற்றும் அறையில் எங்களிடம் திறமையான வீரர்கள் இருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டோம்.
இது ஒரு நல்ல போட்டி. இதில் வெற்றி பெற்றது கசப்பானதாகவும், இனிமையானதாகவும் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல இந்த வெற்றியானது மனதில் பெரியதொரு உணர்வை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கவில்லை. இது சற்று தாமதமான வெற்றி தான். நாங்கள் இந்தப் போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருந்தோம், ஆனால் முக்கியமான போட்டிகளில் அதை செய்ய தவறவிட்டோம். ஆனால் அது இன்றைய போட்டியில் நடைபெற்றது.
மறுபுறத்தில் இது மிகவும் கசப்பானது, ஏனென்றால் நாங்கள் நிறைய பேரை ஏமாற்றிவிட்டோம், அதை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. எனவே நாங்கள் உடைமாற்றும் அறையில் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். நாங்கள் ஒன்று சேர்ந்து இந்தப் போட்டியில் வெளிப்படுத்திய திறமையை அனுபவிப்போம். ஆனால் நாங்கள் நாடு திரும்பினால் இந்த தோல்வியின் உணர்வு இன்னும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எனவே, இந்த வெற்றி தென்னாபிரிக்க இரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தது. வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடி இருந்தனர், அழுத்தத்திற்கு மத்தியில் களத்தில் மிகச்சிறப்பாக செயற்பட்டோம். இதன் விளைவாக இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த அழுத்தம் போட்டி முழுவதிலும் இருந்தது. இதற்குப் பின்னால் அணியின் கூட்டு முயற்சி இருக்கிறது. எனவே, அது ஒருபோதும் பிரச்சினையாக இருக்கவில்லை. அதுதவிர திரைக்குப் பின்னால் எதுவும் இல்லை.
இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் பிரிட்டோரியஸை அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்தோம், ஆனால் அணிச் சேர்க்கைகள் ஏற்படுத்தும் போது அவரை அணிக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் லுங்கி எங்கிடிக்குப் பதிலாக அவர் விளையாடி சிறப்பாக பந்துவீசியிருந்தார்.
அதேபோல, ஹஷிம் அம்லாவுடனான இணைப்பாட்டமும் இப்போட்டியை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக இருந்தது. இவ்வாறு மிகப் பெரிய இணைப்பாட்டமொன்றைப் பெற்றால் எந்தவொரு ஓட்ட இலக்கையும் எளிதாக துரத்தி அடிக்க முடியும்.
இந்த தொடர் முழுவதும் நாங்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. நீண்டதொரு இன்னிங்ஸொன்றை கட்டியெழுப்ப முடியாமல் போனது. அதிலும் பங்களாதேஷ் அணியுடனான போட்டிதான் இதில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது என்று நான் நினைக்கிறேன்.
இங்கிலாந்து ஒரு நல்ல அணி, அந்த நாளில் அவர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர். அதேபோல பங்களாதேஷ் அணி நம்பமுடியாத சிறப்பாக விளையாடியது. இதுதான் எங்களை மிகவும் பாதித்தது. அந்த போட்டிகளில் தாக்கத்தைத் தான் நாங்கள் அடுத்த போட்டிகளுக்கு எடுத்துச் சென்றோம்.முதல் வாரம் உண்மையில் எங்களை பின்னுக்குத் தள்ளியது. ஆனால் அது தான் எமது பின்னடைவுக்கு காரணம் என்று எங்களுக்குத் தெரியும், அதை எங்களால் மறைக்க முடியாது” என கூறினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment