இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையை விட்டும் காப்பாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் புதிதாக பதவியேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தெரிவித்தார்.
நிட்டம்புவ சமூக பொலிஸ் பிரிவினால் நேற்று (12) இரவு கஹட்டோவிட்ட மகளிர் கல்வி வட்ட கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பள்ளிவாயல்கள் மூலம் மாணவர்களுக்கு இந்த செய்தியை அறிவியுங்கள். மாணவர்கள் இரவில் வீதிகளில் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என பாடசாலைகளில் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர்கள் இந்த விடயத்தில் கருத்தில் கொள்ளுங்கள். நாம் அழைத்துச் சென்றதன் பின்னர் எமக்கு சட்டத்தை நிறைவேற்ற இடமளியுங்கள்.
முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இளைஞர்களை போதையிலிருந்து விடுவிப்பதற்கான உதவிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சட்ட முரணான செயற்பாடுகள் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து உங்களது ஊர்களில் குடியேறியுள்ளவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருங்கள். அவர்கள் சிலபோது பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடலாம். அதனால், முழு கிராம மக்களும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் அனுர குணவர்த, இடமாற்றம் பெற்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகையின் பின்னர் கஹட்டோவிட்ட முஸ்லிம் மக்களுடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment