புலி.பிரபாகரன் விவகாரம் ; தமிழரை கொச்சைப்படுத்தும் மைத்திரி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்   அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்.

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண ஹங்குராங்கெத்த எலமுல்ல கபரகல தமிழ் வித்தியாலயத்திற்கான வகுப்பறை கட்டட தொகுதி  திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர்  தெரிவித்ததாவது,

போதைப்பொருள்களை ஒழித்துக்கட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதற்கு நாமும் முழு ஆதரவையும் வழங்கத் தயாராகவே இருக்கின்றோம். 

ஆனால் அவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தான் எமக்கு மனக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், போதைப்பொருள் வர்த்தகத்தையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே இதனைப் பார்க்கின்றோம்.

போதையை ஒழிக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கை சரியானது. ஆனால், அதனை மையப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடக்கூடாது.-என்றார்.

போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் தான் அவர் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment