காங்கேசன்துறை நோக்கி வரும் தொடருந்து!

'போதையிலிருந்து விடுதலையான நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய தொடருந்து தனது முதலாவது பயணத்தை இன்று ஆரம்பித்தது.

இந்தத் தொடருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும்.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மருதானை வரை தொடருந்தில் பயணித்தார்.

போதைப்பொருளால் ஏற்படும் தீய பின்விளைவுகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

'இலங்கையிலிருந்து போதைப்பொருள்களை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு' மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முகமாக பயணத்தை ஆரம்பித்த இந்த தொடருந்து 'போதையிலிருந்து விடுதலையான நாடு' என்ற பெயர் சூட்டியதற்கான நிகழ்வை உறுதிப்படுத்தும் முகமாக ஜனாதிபதியால் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்தத் தொடருந்து இரண்டு எஞ்சின்கள், குளிரூட்டப்பட்ட இரண்டு பெட்டிகள், 2ஆம் வகுப்பைக் கொண்ட இரண்டு பெட்டிகள் மற்றும் 3ஆம் வகுப்பை கொண்ட ஏழு பெட்டிகளையும் கொண்டதாகும்.

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ரஞ்ஜித்சிங் சந்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர்.சமந்த கிதலவஆரச்சி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment