போலந்து நாட்டின் டேன்சிக் நகர மேயர், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலந்து நாட்டின் துறைமுக நகரமான டேன்சிக் நகர மேயராக 1998 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் பாவெல் அடமோவிச் (வயது 53). ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். குடியேறிகளின் உரிமைகளுக்காகவும் பரப்புரை செய்தார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் அறக்கட்டளை சார்பில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டேன்சிக் மேயர் பாவெல் அடமோவிச் கலந்து கொண்டார். அப்போது, மேடையை நோக்கி வந்த இளைஞர், திடீரென மேயரை கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மேயரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அரசியல் பகை காரணம் இல்லை என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment