மன்னார் விவகாரம் வெட்கத்துக்குரியது - மனோ கணேசன்

சிவராத்திரியை முன்னிட்டு திருகேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம், தமிழினத்தை வெட்ககேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழர் ஒற்றுமையை கேள்விக்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாகிய இச் சம்பவம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வழிகாட்ட வேண்டிய மதத் தலைவர்கள், வன்முறைக்கு தலைமை தாங்குவதைக் கடுமையாகக் கண்டிக்கின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க தலம் என்பது போன்று, அதே மாவட்டத்தில் அமைந்துள்ள திருகேதீஸ்வர ஆலயம், தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல்பெற்ற இந்து தலம் என்பதும் அறியப்பட வேண்டும்.

இரு தரப்புகளும், இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை மீறும் எந்தவொரு அடாவடி நடவடிக்கையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இன்று சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்குரிய பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.  உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்பட வேண்டும். 

மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரி இரத்நாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீநாத் பெரேரா, பிரதி பொலிஸ் மா அதிபர் அபேவிக்கிரம ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.

சிவராத்திரியையடுத்து, விரைவில் திருகேதீஸ்வர ஆலயத்துக்கு நேரடியாக வந்து சகல தரப்பினரிடமும் கலந்து பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன். திருகேதீஸ்வர ஆலய அறங்காவலர்களிடம் இது தொடர்பாகத் தெரியப்படுத்தியுள்ளேன். என்றுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment