தமிழக எல்லையை கடந்த “கோதண்டராமர் சிலை'

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய  லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் வெடிப்பு, லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்காக 3 மாத காலம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம்  சென்றவுடன் லாரி டயர்கள் மீண்டும் பஞ்சர் ஆகி, இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது.
 
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மண் சாலையை சமப்படுத்தும் பணி  மேற்கொள்ளப்பட்டு லாரி புறப்பட்டு, சூளகிரி, கோனேரிப்பள்ளி, காமன்தொட்டி வழியாக கோபசந்திரம் வந்தது. அங்கும் மண் பாதையில் லாரி சிக்கிக்கொண்டதால், மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு அன்று மாலை ஓசூர் அருகே பேரண்டபள்ளியை லாரி வந்தடைந்தது. இந்த நிலையில் பேரண்டபள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் தென்பெண்ணை ஆற்றை லாரி கடந்து செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தையொட்டி, மண் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சமீப நாட்களாக பெய்த மழையின் காரணமாக மண்ணில் ஈரப்பதம் இருந்ததால் லாரியை இயக்க முடியவில்லை.
 
மேலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழை காரணமாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண் சாலை அடித்து செல்லப்பட்டது. பெங்களூரு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டதாலும், ஓசூர் பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வந்ததாலும், தென்பெண்ணை ஆற்றின் அருகே மண் பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
எனவே, மாற்று ஏற்பாடாக, தரைப்பாலம் அமைத்து அதன் வழியாக சிலையுடன் கூடிய லாரி செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆற்றில் குழாய்கள் அமைத்து அதன் வழியாக தண்ணீரை திருப்பியும், குழாய்கள் மீது மண்ணை கொட்டி, மண் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அந்த பணிகள், நேற்று 90 சதவீதம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 13 நாட்களாக பேரண்டபள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை, 
பலநாள், பல இடையூறுக்கு பின் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது. தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சென்றடைந்தது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முடியாமல் 13 நாட்கள் சிலை செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக சிலை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment