சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை

சிங்கள மக்களோடு இணைந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லையென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிங்களவர்களுடன் தமிழ் மக்கள் ஒன்றிணையுமாறு வந்த வேண்டுகோளை மிக எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகால நாட்டு நடப்புக்கள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிறுபான்மை இனம் எனும் அடையாளத்தைத் தக்க வைக்கின்ற நிலைமையிலே அந்தந்த காலத்திற்கு ஏற்ற விதத்தில் அனைத்து சிறுபான்மை இனங்களும் ஒரே செயற்பாட்டில் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமைத்துக்கொள்வதும் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக எங்களைப் பலப்படுத்திக்கொள்வதும் தற்போது தேவையான ஒரு அம்சமாகும்.
அரசியல் என்பது ஒரு சதுரங்கம். நிகழ்வுகளுக்கு ஏற்ற விதத்திலே அந்தந்த அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அதில் முன்னிலை வகிப்பவர்கள் தங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்வார்கள்.
அந்த வகையிலேதான் தற்போது நடைபெற்றிருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகலும் அமைந்துள்ளதாகக் கருதுகின்றேன்.
அரசியல் காய்நகர்த்தல்களில் அவர்கள் கையாண்ட வழியாகத்தான் இதனை நாங்கள் அவதானிக்கின்றோம்.
தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தைப் பேணிக்கொண்டு வாழ விரும்புபவர்கள்.
இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது இந்த நாட்டின் அரசியலுக்கு உகந்ததல்ல.
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு வலுச் சேர்க்கும் முகமாக உண்ணாவிரம் மேற்கொண்டு அதனை பௌத்த துறவிகளின் மன்றுக்கு கொண்டு சென்றிருக்கின்றார். இதனை அவர் நாடாளுமன்றத்திலேயே கையாண்டிருக்க முடியும்.
இது போன்றே ஞானசார தேரரை ஜனாதிபதி விடுதலை செய்யும்போது அவர் அரசியல் விடயங்களில் ஈடுபடமாட்டார் என்று தெரிவித்திருந்தார் ஆனால் தற்போது அக்கதைகள் எல்லாம் பொய்த்துப்போய்விட்டன.
உண்மையில் கண்டியில் நடைபெற்ற பௌத்த பிக்குகளைத் தலைமையாகக் கொண்ட அந்த மக்கள் பேரணி என்பது இந்த நாட்டினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலிலே மிகப் பொருத்தமற்ற ஒரு செயற்பாட்டைக் கொண்டுவரும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது.
தற்போது நடைபெறுகின்ற விடயங்கள் சிறுபான்மை சமூகத்தினுடைய அபிலாசைகள் எல்லாம் முற்றுமுழுதாக முடக்கப்படுகின்ற செயற்பாட்டுக்கு அடித்தளமாகவே அமையப்போகின்றன” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment